Thursday 3 March 2016

ஆதி உள்ளுணர்வின் பெருங்காடு

எனக்கான பாதையில்தான்
உனக்கான வெளிச்சம் பூக்கிறது என்பதை
நினைவில் வைத்துக்கொள்!

ஒரு பெருங்காட்டின் பேரிரைச்சலை
என் செவிமடல்கள் தாங்கிக் கண்டிருப்பதை
உன் உதடுகள் கவனித்துக் கொள்ளட்டும்!

ஆதிபச்சையத்தின் முதல் துளிர்
சிலிர்க்கவைத்த ரெட்டினல் திரையை
புதைத்து வைத்திருப்பது என் கண்கள் என்பதை
உன் இருப்பு உறுதிப்படுத்திக் கொள்ளட்டும்!

அடர்வனத்து முதல் பூவையும்
வேட்டை மிருகத்தின் மாமிச மிச்சத்தையும்
பிரித்து உணரும் செல்கள் என் நாசியில் ஜனனமானதை
உனது இந்த நொடி மூச்சுக்காற்று
சொல்லிவிட்டு நுழையட்டும்!

ஒரு சிட்டெறும்பின் முதல் அசைவு
சிலிர்ப்பூட்டும் எனது உள்ளுணர்வு
உனது உயிர்பிரியும் கணத்தையும் குறித்துவைத்துதான்
மரணிக்கும் என்பதை மறந்துவிடாதே!

-நிவேதா





No comments:

Post a Comment