Tuesday 1 July 2014

நியூரான்களின் நிரற்தொடர்ச்சி

நியூரான்களின் நிரற்தொடர்ச்சி
**********************************************
அந்த ஆசிரியர் அன்று விடுப்பு எடுத்திருக்கலாம்!
நரம்பு மண்டலத்தில் குவிந்து கிடக்கும்
அத்தனை கோடி நியூரான்களும் 
உன் இன்மையை உணர்ந்திருக்கின்றன!

மாதிரிகள் எதையும் அருகில் உணராததால்
என்னுடன் சேர்ந்து புடைத்து அழும் நரம்புகள்,
உன் இயல்பென நான் பாவித்த அணைத்து
நிறங்களையும்
பிரதிபலிக்கும் அதிசயக் கண்ணீரில்,
ஒவ்வொரு நியூரானும் தனக்குப் பிடித்த
நிறத்தைத் தொடர ஆரம்பித்து விட்டது!

பேராசை பிடித்த சில நியூரான்கள்
பார்வைக்குப் புலப்படும் அத்தனை நிறங்களையும்,
தானே குறிக்க நினைத்து,
ஒன்றோடு ஒன்று சண்டை இட்டுக்கொன்டத்தில்
என் நரம்புகளெல்லாம் இன்னும் புடைத்தழுகின்றன!

உடலில் ஏதேனும் ஒரு பாகம் வெட்டுண்டால்
அப்பாகத்தை நிரற்தொடர்ந்த நியூரான்கள்
அருகில் இருக்கும் வேறொரு பாகத்தை
தொடரத் துவங்கிவிடும் என்று
உனக்கு கற்பித்த அன்று,
அந்த ஆசிரியர் நிஜமாகவே விடுப்பு எடுத்திருக்கலாம்!
-நிவேதா

Sunday 13 April 2014

நிற்காத பூமியை நிற்கச்சொல்லி...!

                 நிற்காத பூமியை நிற்கச்சொல்லி...!
இன்னும் ஒரு வாரத்தில் ஒரு புது உயிரை,புது உறவை,
தன் வாழ்விற்குள் வரவேற்கும் ஒரு பூரிப்பு காணப்படவில்லை அவள் கண்களில்!
தன் கையில் அணிந்திருக்கும் வளையல் தங்கமில்லை ஆனாலும்,
அதன் ஒலியால் தன் வயிற்றில் உறங்கிக்கொண்டிருக்கும் அந்த உயிரை
 எழுப்பும் ஓர் அவசரம் வெளிப்படவில்லை அவள் முகத்தில்!
நிற்காத பூமியை நிற்கச்சொல்லி கண்கள் மூடி வேண்டுகிறாள்!
நடக்காது எனத் தெரிந்தும்,நடக்காத ஒன்றை நடக்கச்சொல்லி அழுகிறாள்!
கண்கள் தாண்டி வழிந்த கண்ணீர்,அவள் நாவில் தன் சுவையைத் தீட்டிய போதும்,
அதை துடைக்கும் நோக்கத்தோடு கூட வயிறை விட்டு விலக விரும்பவில்லை அவள் கைகள்!
தன் வாழ்நாள் முழுவதும் அவள் அனுபவிக்க வேண்டிய அந்த தொடுதலை ஸ்பரிசிக்க,
அவளுக்கு தரப்பட்ட கால அவகாசம்,அந்த ஒரு வாரம்!
தாயாகத்  துடிக்கும் ஒரு பெண்ணிற்கு வரம் தரும் தெய்வமாகும் சிலிர்ப்பு ஒரு புறம்...!
கிடைத்த வரத்தை சாபமாக எண்ணி தாரைவார்க்கும் வறுமையின் கொடூரம் மறுபுறம்...!
இதுவும் கடந்து போகும் என இருபது ஆண்டுகள் கழித்துவிட்ட அவள் மனதில்,
இதுவரை எழாத ஒரு புதிய உணர்வு!
என்றோ உடைந்த கடிகாரத்தை பார்த்துக்கொண்டே,
அது உடைந்ததை எண்ணி ஆறுதல் அடைகிறாள்!
அந்த வாடகைத்தாய்!
நிற்காத பூமியை நிற்கச்சொல்லி...!!!

                                                -நிவேதா

Sunday 30 March 2014

விழலுக்கு இறைத்த தாய்ப்பால்

            விழலுக்கு இறைத்த தாய்ப்பால்
    பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒருநாள் தான் உள்ளது.விழாவிற்காக ஆடைகள் வாங்க வேண்டிய எண்ணம் நேரமின்மையின் காரணத்தால் நிறைவேற்றப் படாமலே இருந்தது.இன்று புத்தாடை பற்றிய பேச்சு தொடங்கியபோது, பொன்னி தனக்குப் பட்டுப்புடவை வேண்டுமென்று முதல்முதலாகக் கேட்டாள்.தங்கள் மகளுக்கு இருபது வயதாகிவிட்டதை எண்ணி காவேரியும் பார்த்திபனும் பூரிப்படைந்தனர்.இதைத் தொடர்ந்து,யாழினியும் அக்கா வாங்கும் சேலையின் நிறத்திலேயே தனக்கும் பட்டுப்பாவாடை வேண்டுமென்று கேட்கவே,தாங்கள் வழக்கமாக பட்டாடை வாங்கும் சேலை வியாபாரி சுந்தரம்,வீட்டிற்கு அழைக்கப்பட்டார்.
    சுந்தரம் பரம்பரை பரம்பரையாக நெசவு செய்யும் குடும்பத்தைச் சேர்ந்தவர்.ஓவியக்கலையில் தேர்ந்தவர்.ஆதலால் பாரம்பரியம் கூடிய அவரது புதுமையைப் பொன்னி மிகவும் விரும்பினாள்.பொழுது மயங்கத் தொடங்கிவிட்டது.சுந்தரத்தின் வருகைக்காகப் பொன்னியும் யாழினியும் மிகுந்த உற்சாகத்துடன் காத்துக்கொண்டிருந்தனர்.
    கதவு தட்டப்படும் ஓசை கேட்டவுடன் பொன்னி ஓடிச்சென்று திறந்தாள். கைநிறைய சீலைகளையும் தனக்கே உரிய புன்னகையையும் சுமந்து நின்ற சுந்தரத்தைக் கண்டவுடன் அவளுக்கு மிகுந்த ஆனந்தம்.வந்தவரை வரவேற்ற காவேரி,அவருக்குத் தேநீர் தருவதற்காக அடுப்பில் பாலை வைத்துவிட்டுப் புடவைகளைப் பார்ப்பதற்காக வந்தமர்ந்தாள்.
    பொன்னிக்கு இயல்பாகவே இரசனை அதிகம்.அவளது மகிழ்ச்சியின் மணம்,அவர் கொண்டுவந்த புடவைகளின் வண்ணங்களை மெருகேற்றிக் கொண்டிருப்பதைச் சுந்தரம் உணர்ந்தார்.இப்படி தான் சென்ற முறை காவேரிக்கு புடவை வாங்க சுந்தரம் அழைக்கப்பட்ட போது,ரவிவர்மன் ஓவியத்தில்,தமயந்தி கட்டியிருக்கும் சேலையைப் போல் தனக்கும் பட்டுப்பாவாடை வேண்டும் எனக் கேட்டாள்.அதற்காகவே ஒரு பாவடையை அதே போல் நெய்து தந்தார்.திடீரன உதித்த ஒரு எண்ணத்தின் உந்துதலால்,இவளைப் போன்ற அபூர்வ இரசனை உடைய பெண்ணை மனதில் நிறுத்தி,அவர் நெய்த சேலை ஒன்றை எடுத்துக் காட்டினார். கருநீலமும் வாடாமல்லி நிறமும் கலந்த கலவையில்,களிடோஸ்கோப் கண்டிராத ஓவியதுகல்களோடு மின்னியது அப்புடவை.
  
“பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல் வயிரம்
நட்ட நடு நிசியில் தெரியும் நக்ஷத் திரங் களடீ”
தன்னை அறியாமல் தன் உதடுகளில் இருந்து விழுந்த பாரதியின் வார்த்தைகளைச் சில நொடிகள் கழித்தே உணர்ந்த பொன்னி,அது தனக்கான சேலை தான் என்று உளமாற ஏற்றுக்கொண்டாள்.பொன்னி இயல்பாகவே அழகானவள்.கோயில் சிற்பத்தில் பொருந்திய அனைத்து அம்சமும் அவள் முகத்தில் பொருந்திருக்கும். இக்காலத்தில் அழகின் இலக்கணம் பல காரணங்களால் மாற்றப்பட்டதால் பலர் கண்களுக்கு இவள் அழகானவளாகத் தென்படுவதில்லை.இந்தப் புடவையை பார்த்தபொழுது அவள் முகத்தில்  தோன்றிய ஒரு அற்புத எழிலை அவ்வீட்டிலிருந்த அனைவரும் இரசித்தனர்.நடந்தது தற்செயலா?நெசவு சாத்திரத்தில் எழுதப்படாத விதியா?எனக் குழம்பிய சுந்தரம் தெளிவடைவதர்க்குள்,மூச்சு முட்ட மகிழ்ந்த பொன்னி,அதை வெளிக்காட்ட ஒரு வடிகால் தேடி,வீடெங்கும் சுற்றித்திரிந்தாள்.
    ஏதோ நினைவில் அடுக்களைக்குள் நுழைந்த பொன்னி,அடுப்பில் பொங்கி வழிந்த பாலைக் கண்டு,பதற்றத்தோடு அடுப்பை அணைத்துவிட்டுத் துயருற்றாள்.அவள் கொண்டிருந்த உவகை எல்லாம் அந்தப் பாலோடு கரைந்து ஒழுகிவிட்டது.
    ”அம்மா!ஏன் இப்படி பாலை வச்சிட்டு அங்க வந்து உட்கார்ந்துட்டிருக்க?பாரு...!எவளோ பால் வீணாகிடுச்சு!!”என்று ஆவேசப்பட்டாள்.
    அவள் முகம் அடைந்த வாட்டம்,பல நிமிடங்களுக்குப் பிறகும் கலையப்படாததைக் கவனித்த சுந்தரம்,அவள் கவனத்தைத் திசை திருப்பும் நோக்கத்தோடு,வேறு சில புடவைகளைப் பற்றிச்சொல்லிவந்தார். அவள் அதைக் காதில் போட்டுக் கொள்வதாகவே தெரியவில்லை.
    சுந்தரம் பொறுமை இழந்தவராய்,”பால் தானே சிந்திடுச்சு!அதுக்கு ஏன் இப்படி முகத்தைத் தூக்கி வச்சிட்டிருக்க?”என்று வினவினார்.
    “என்னமோ எனக்குப் பால் வீணானால் மனசே பொறுப்பதில்லை!அந்தப் பாலைத் தாய்ப்பசு அதோட கன்றுக்காக சுரந்திருக்கும்!அதை நாம எடுத்துட்டு யாருக்கும் உபயோகப்படாம வீனாக்குறது ரொம்பவே சங்கடமா இருக்கு!அந்தப் பசுவோட உழைப்பு,தியாகம் எல்லாம் இப்படி விழலுக்கு இறைத்த நீராகிப் போவது நிஜமாவே கஷ்டமா இருக்கு!”துயரத்தால் ஆட்கொள்ளப்பட்டவள் போல்,இமை கொட்டாமல் பதில் உரைத்தாள் பொன்னி.
    சுந்தரத்திற்கு வேறு எதுவும் பேச நா எழவில்லை.இந்தச் சிறுவயதில் பொன்னிக்கு இருக்கும் ஞானத்தை நினைத்து,உளமகிழ்வோடு அந்தப் புடவையையும்,அதே மாதிரி யாழினிக்குப் பட்டுப்பாவாடையும் தந்துவிட்டு வெளியேறினார்.
    புத்தாடைகள் வாங்கிய செலவு ஏழாயியரம் ருபாய் ஆகிவிட்டது.ஆயினும் தன் மகள்களை மகிழ்வித்த நிறைவோடு,பார்த்திபன் உறங்கிவிட்டான். ஏனோ காவேரிக்கு மட்டும் தூக்கமே வரவில்லை.அவள் மனம் கனத்துக்கொண்டிருந்தது.பொன்னிக்கு இருபது வயதாகிவிட்ட நினைப்பும்,பால் வீணானதற்க்கு அவள் அடைந்த மனக்கசப்பும்,காவேரியை இருபது ஆண்டுகள் பின்னோக்கி யோசிக்க வைத்தது.
    அப்போது காவேரிக்கு இருபது வயதிருக்கும்.பத்தொன்பது வயதிலேயே அவளுக்குத் திருமணம் ஆகிவிட்டது.பிறந்த வீட்டில் செல்லமாக வளர்ந்த அவளுக்கு,தன் கணவன் வீடு மிகுந்த ஏமாற்றத்தைத் தந்தது.அவள் வாக்கப்பட்டது என்னமோ செழிப்பான குடும்பம் தான்.ஆனால் பார்த்திபனுக்கு அப்போது சம்பாத்தியம் இல்லை.தொழில் முடங்கிவிட்டது. அதற்குப் பலர் காரணமாய் இருந்தாலும்,பாதிப்பு அடைந்தது காவேரி தான்.அவர்கள் தங்கள் முதலாம் ஆண்டு திருமண நாளைப் பொன்னியுடன் தான் கொண்டாடினார்கள்.அந்த மருத்துவமனையில்,காவேரிக்குப் பெண் குழந்தை பிறந்த அன்று,அது இமை திறந்து தன் தாயைப் பார்த்த முதல் பார்வை,அந்த நொடியே காவேரியின் மனதில் செதுக்கப்பட்டது.உலகில் உள்ள அத்தனை இன்பமும் ஒன்று சேர்ந்து எடுத்த உருவாய் பொன்னியை உணர்ந்து,களிப்படைந்தாள் காவேரி.
    பொன்னியின் ஸ்பரிசம் காவேரியின் ஒவ்வொரு அணுவிலும் சென்று திகட்டாத இன்பத்தைக் கொடுத்தது.அந்த ஸ்பரிசத்தை அனுபவிக்க, அவளுக்குத் தரப்பட்ட அவகாசம் அவ்வளவு சிறியதாக இருக்கும் என்பதை அவள் நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டாள்.வறுமையால் ஆட்கொள்ளப்பட்டவருக்கு நினைத்ததேதும் நடந்தடுண்டோ?
    காவேரியும் பார்த்திபனும் வேலைதேடிச் சென்னை மாநகரத்தை நோக்கிப் பயணித்தனர்.ஆனால் சென்னை அவர்களை அன்புடன் வரவேற்றதாகத் தெரியவில்லை.வறுமையின் நீண்ட பாதையில் அவர்களால் பொன்னியைச் சுமந்து பயணிக்க முடியவில்லை.ஆதலால் பொன்னி,காவேரியின் தாய் வீட்டில் விடப்பட்டாள்.பொன்னிக்கு அவளது தாத்தா பாட்டியிடம் இருந்து கிடைத்த அன்பில் குறைகாண முடியாது.வீட்டின் முதல் பேத்தி என்பதால், பொன்னி அனைவராலும் சீராட்டி வளர்க்கப்பட்டாள்.என்ன தான் இருந்தாலும்,தாய் அன்பு வழி வராது என்பதைப் பொன்னி உட்பட அனைவரும் உணர்ந்தனர்.பொன்னி வளர வளர அவள் உணர்வுகளுக்கு வடிகாலாய் இருந்த பெருமை,தாத்தா வீட்டில் வளர்க்கப்பட்ட செல்ல நாய் டோனியையே சேரும்.
    பார்த்திபன் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில், எழுநூற்றைம்பது ரூபாய் சம்பளத்திற்கு வேளையில் சேர்ந்தான்.காவேரி ஒரு தனியார் தொடக்கப்பள்ளியில் ஐநூறு ரூபாய் சம்பளத்திற்கு ஆசிரியர் பணியில் சேர்ந்தாள்.பார்த்திபனுடைய சகோதரர்கள் அனைவரும் சென்னையில் ஒரு நல்ல நிலையில் இருந்தாலும்,வறுமையின் காரணமாக இவர்கள் இருவரையும் புறக்கணிக்கவே செய்தனர்.ஒரு சிறு வீட்டில் இருவரும் வாடகைக்கு குடியேறினர்.அவர்களின் மாத வருமானத்தில் எண்ணூறு ருபாய் வீட்டு வாடகைக்கே செலவழிக்கப்பட்டது.மீதம் இருந்த நானூற்றைம்பது ரூபாயில் இருவரும் குடும்பம் நடத்தினர்.பார்த்திபன் வேலை செய்த அலுவலகம்,அவர்கள் வீட்டிலிருந்து ஒன்பது கிலோமீட்டர் தள்ளி இருந்தது.காலையும் மாலையும் அவனது பழைய மிதிவண்டியை மிதித்துச் சென்று வருவதற்குள் அவனது கைகால் இரண்டும் விட்டுபோய்விடும்.தயிர்சோறும் ரசம்சோறும் தான் அவர்களின் வயிற்றை நிரப்பி வந்தன.சேமிப்பு என்பதற்கே சிறிதளவும் இடமில்லாமல், குழந்தையின் இருப்பும் உடனில்லாமல்,எதிர்கால வாழ்க்கை பற்றி பலிக்காத கனவோடு,உயிரற்ற உடல்களாய் இருந்தனர் அவ்விருவரும்.
    காவேரி கிண்டர்கார்டன் குழந்தைகளுக்கு வகுப்பு ஆசிரியையாய் நியமிக்கப்பட்டாள்.தினமும் அவள் பார்க்கிற ஒவ்வொரு குழந்தையும் அவளுக்குப் பொன்னியாகவே தெரிந்தது.காலையில் பள்ளிக்கு அம்மாவின் கையைப்பிடித்து,தத்தித்தத்தி நடந்துவரும் பிள்ளைகளை இரகசிய கண்ணீருடன் இரசிப்பாள்.குழந்தைகளுக்கு கைப்பிடித்து எழுதச் சொல்லிக்கொடுப்பது மட்டுமில்லாமல்,அவிழ்த்து விடும் ரிப்பனைக் கட்டிவிடுவது முதல்,ஒழுகும் மூக்கைச் சிந்திவிடுவது வரை,அவள் செய்த அனைத்தும்,பொன்னியை நினைத்து...பொன்னிக்காக...
    தினமும் பள்ளிக்குழந்தைகள் புரியும் ஒவ்வொரு செய்கையையும் உளமாற உள்வாங்கி,இப்படித்தான் தன் பொன்னியும் செய்துக்கொண்டு இருப்பாள் என யூகித்துக்கொள்வாள்.ஒவ்வொரு முறையும் அவளை “மிஸ்” என அழைக்கும் குரலெல்லாம் தாய்மையின் அகராதியால் மொழிபெயர்க்கப்பட்டு, “அம்மா” என்று பொன்னியின் குரலில் அவள் காதுகளைச் சென்றடையும்.இப்படி பள்ளியில் பொன்னியின் நினைவிலேயே வாழ்ந்துவந்த காவேரிக்கு,வீடு ஒரு சூன்யமாகத் தெரியும்.அதைப் போக்கிக்கொள்ள,பொன்னியின் இருப்பைப் பற்றி ஏகாந்த கனா காணுவாள்.
    அப்போது பொன்னி பிறந்து முழுதாக ஓராண்டு கூட ஆகவில்லை.காவேரிக்குத் தாய்ப்பால் சுரப்பதும் நிற்கவில்லை.வறுமையின் பாதை தாயையும் மகளையும் பிரித்துவிட்ட பிறகு,தாய்ப்பால் மட்டும் எந்த பாதையில் பயணிக்கும்?பள்ளி நேரத்தில் காவேரிக்குத் தாய்ப்பால் சுரப்பதுண்டு. அவ்வேளையில் கழிவறைக்குள் சென்று அதனை இறைத்துவிடுவாள். அப்போது மனவேதனை தாளாமல் கண்ணீரும் சேர்ந்து வழியும்.தண்ணீர் குழாவைத் திறந்துவிட்டு ஓவென்று அழுவாள்.மறைப்பதில் நீருக்கு நிகர் வேறேதும் உண்டோ?
    ஒரு குழந்தை தன் தாயின் கருவறையில் இருந்து வெளியே வந்த பிறகு, அவ்விரு உயிர்களின் நீடித்த உறவுக்கு முதல் தொடர்பு தாய்ப்பால் தான். தன் பொன்னியின் திருவாய் சென்று அவளது ஒவ்வொரு அணுவாலும் உட்கொள்ளப்பட வேண்டிய இந்த தாய்ப்பால்,வழி நழுவி இப்படி சாக்கடையில் சென்று சேர்வதை எண்ணி மனம் கனத்துப்போவாள் காவேரி.அந்நாளில் பால் சுரப்பதைக் கட்டுப்படுத்த தண்ணீர் கூட அருந்தாமல் தாகத்தால் தவிப்பாள்.நினைத்துப்பார்க்ககூட கடினமான பாதையைத் தன் பொன்னியின் எதிர்காலதிற்காக ஏற்றுக்கொண்டு வாழ்ந்தாள்.
    ஒவ்வொரு மாதக்கடைசியிலும்,பொன்னியின் குரலைக் கேட்பதற்காகத் தாங்கள் சேர்த்துவைத்த இருபது ரூபாயை எடுத்துக்கொண்டு,டெலிபோன் பூத்தில் வரிசையில் நிற்பார்கள்.அவர்கள் இருவரும் தொலைபேசியில் எண்களைப் பதிவிடும்போது பொன்னியை ஸ்பரிசிப்பர்கள்.அழைப்பு விடுத்த பிறகு,அந்தப்பக்கம் எடுக்காமல் தவறவிடப்படும் ஒவ்வொரு ரிங்கும் இருவரின் காதுகளையும் திருகி வேதனைப்படுத்தும்.சிறிது நேரத்திற்குப்பின் பார்த்திபனின் கைகால் எல்லாம் வலி இழந்துவிடும். காவேரியின் கனத்த மார்பு லேசாகிவிடும்.அதோ! பொன்னியின் குரல்!!!
    “அம்மா...! அம்மா...! இன்னும் நீ எழுந்துக்கலையா?பொங்கல் அன்னிக்கு கூட இப்படியா தூங்குவ?நான் குளிச்சே முடிச்சிட்டேன் பாரு!சீக்கிரம் எழுந்து குளிச்சிட்டு வா!எனக்குப் புது சேலை கட்டிவிட வேணாமா?” பொன்னி புதுசேலை கட்டிக்கொள்ளும் ஆவலில் கத்திக்கொண்டு இருந்தாள்.காவேரி தூக்கமில்லாமல் தவித்துக்கொண்டிருந்ததை அவள் அறிந்திருக்கவில்லை. அக்காவுடன் சேர்ந்துகொண்டு யாழினியும் சத்தம்போட ஆரம்பித்துவிட்டாள்.
    ஓருவழியாகப் புடவை கட்டி முடித்தாகிவிட்டது.காவேரி முதல்முதலாகப் பொன்னியைச் சேலையில் பார்க்கிறாள்!இருபது வருடங்களுக்கு முன்னால் இருந்த தன்னைப் பார்ப்பது போலவே இருந்தது அவளுக்கு!
    அதோ!பொன்னியின் கண்கள்!அவளுக்குச் சேரவேண்டிய தாய்ப்பாலைத் தராமல் ஏமாற்றியதற்குக் கூண்டில் நிற்கவைத்து வினவுவது போல் இருந்தது காவிரிக்கு!அவளை அந்தக் கண்கள் ஆட்கொண்டன!ஐநூறு ருபாய் சம்பளத்திற்காகத் தாயும் மகளும் செய்த தியாகத்தினை நினைத்துப் பார்த்தாள். இப்பொழுது இருக்கும் பட்டும் பணமும்,தங்கமும் வைரமும் அவளுக்குப் பெரிதாகப் படவில்லை.பொன்னியை மீண்டும் குழந்தையாக்கித் தூக்கிக் கொஞ்சவேண்டுமெனத் துடித்தாள்!

    ஆம்! பொன்னி என்றுமே காவிரிக்குக் குழந்தை தான்! காவிரியின் மனம் மீண்டும் கனத்தது...! விழலுக்கு இறைத்த தாய்ப்பாலை நினைத்து...!!!

எழுதிவைக்கப்பட்ட நிலையாமை

                      எழுதிவைக்கப்பட்ட நிலையாமை
எதிர்பாராத  தேர்வு வேளைகளில்
திடீரென கிழிக்கப்பட்டு
படிக்கப்படாத விடையால்
நிறுத்தமில்லாமல் நிரப்பப்படலாம்!

படித்து மறக்கப்பட்ட விடையால்
நிரப்பபடாமலும் போகலாம்!

பயமறியாதவனின் அறியாத விடையை
தெனாவட்டாய் பிரதிபலித்து
தெரியாமல் மாட்டிக்கொள்ளலாம்!

விடுப்பு விண்ணப்பத்திற்கும்
மன்னிப்புக் கடிதத்திற்கும்
தெளிவாய் நிரப்பப்பட்டு
தயங்கித் தயங்கிக் கொடுக்கப்படலாம்!

தாவரவியல் பாடவேளைபற்றி மறக்கபட்ட சந்தர்பத்தில்
பூவிதழின் குறிப்புகளும்  மகரந்தத்தின் வகைகளும் சுமந்து
கணிதத்திலிருந்து பிரிக்கப்பட்டு
தாவரவியலில் இணைக்கப்படலாம்!

தூரத்து இருக்கைத் தோழியிடம்
அவசரசெய்தி சொல்லி அனுப்ப,
குறுஞ்செய்தி மொழியால் நிரப்பப்பட்டு
ராக்கட்  தூதுவராய் உபயோகிக்கப்படலாம்!

வருகைப்பதிவேட்டை மறந்து
வகுப்பிற்கு வந்த ஆசிரியரின்
கணிசமான அன்பைப் பெற
அன்பளிப்பாய்  வழங்கப்படலாம்!

உலகின் ஆகச்சிறந்த ஆசிரியரும்
உறங்கிப்போகும்  வகுப்பிலும் கூட
பரவசக்கனவோடு விழிதிருப்பவளின்
ஓவியத்தாலோ கவிதையாலோ
மெருகேற்றப்பட்டு பாதுகாக்கப்படலாம்!

தான் காதலிக்கும் பெண்ணிடம்
தன் ஆழ்மனதை அளந்துகாட்ட
உணர்சிகளால் உயிரூட்டப்பட்டு
உளமாற பரிமாறப்படலாம்!

தனக்கு  வயிறு வலிக்கக்கூடாதென
நண்பர்களுக்கு ஊட்டாப்படும் உணவைப்
பார்த்து ஏங்கும் மேசைக்கும் ஊட்டிவிட்டு
பின் அதன் வாய் துடைக்கும் நோக்கம் கொண்டு
பல நேரங்களில் பயன்படுத்தப்படலாம்!

பிரிவிலிருந்து தப்பித்துவிட்டு
எழுத்துகளால் நிரப்பப்படும் வேளையில்
முடிவை நோக்கிப் பயணிக்கும் பாடத்தையும்
காலத்தின் வேகத்தையும்
எழுதுபவருக்கு நினைவூட்டலாம்!

எழுதப்படாமலே கிடப்பில் வைக்கப்பட்டு
இல்லாத பாடத்தையும் பிரசுரிக்க நேரலாம்!

ஆகமொத்தம்
ஒரு சாதாரணமாண(ன)வனுடைய
நோட்டுப்புதகத்தின் நடுப்பக்கமே
நீயும் நானும்!!!


Sunday 26 January 2014

மரணம் ஈன்ற ஜனனம்

           மரணம் ஈன்ற ஜனனம்
நீ நீர் சூழக்கிடந்தால் குளிருமென,
உள்ளங்கை வெப்பத்தால் குளிர்காய வைத்தேனே!

பூமி தொடா உனக்கு,பெயர் சூட்டி,மை தீட்டி,
கண்மணியே வண்ணக்கனவு வளர்த்தேனே!

உன் பிஞ்சு கால்கள் என்னை உதைத்தபோதும்
கைநிறைய வளவி பூட்டி உன் நாட்டியத்திற்கு இசைத்தேனே!

சோறு தண்ணீர் வேண்டாமென்று வெளியே தள்ளி,
உன் கனவுகளால் என் பசிபோக்கிய அன்னமே!

என்ன குறை கண்டாய் நீ இப்புவியில்?
உனக்கெனவே என் உடலில் ஓடும் உதிரத்தைப் பாலாக்கி,
பசியாற்றேன் எனத் தவறாக நினைத்தாயோ?

பொற்கிண்ணத்தில் தேனூற்றி
நிலாச்சோறு ஊட்டமடேன் எனக் கனாவிலும் நினைத்தாயோ?

செவியோரம் இசையமைத்து,கை விரலில் நடைபழக,
தோழி கிடைக்க மாட்டாள் என நினைத்தாயோ?

மனதின் நிறம் மட்டும் பார்த்து உன் உயிருக்குள் உயிராக,
காதலன் கிடைக்க மாட்டான் என நினைத்தாயோ?

பத்து மாதம் உள்ளேயே இருந்தாயே,இன்னும் ஒரு நாள் பொறுக்க மனம் இல்லையோ?

இல்லை,நீ பிறந்தால் நான் இறப்பேன் என்று எண்ணி,
தொப்புள் கொடியைத் தூக்கு கயிறாக்கி, நீ மடிந்து எனக்குத் தாயானாயோ?

என் இரத்தம் பாலாகி உன் திருவாய் சேர இயலாமல்,
அத்தனையும் கடலாகி கண்ணிரண்டில் ஓடுதமா!

நீ வாழ்ந்த பனிக்குடம் முழுதாய் வற்றிப்போய்,பாலைவனமாய் கிடக்குதம்மா!

உன் இனிய அழுகையொலி கேளாமல்,காதிரண்டும் கதறுதம்மா!

நீ போட்ட இந்த உயிர்பிசையை ஏற்றுக்கொள்ளவா?

மேகத்தில் தவழ்ந்து கொண்டிருக்கும் உனக்கு,
வந்து நடை கற்றுத்தரவா?


கவிதையாக்கம்:நிவேதா